சத்தியமங்கலம் அருகே உடல்நலக் குறைவால் யானை உயிரிழப்பு
சத்தியமங்கலம் அருகே உடல்நலக் குறைவால் யானை உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடியை அடுத்த மல்லன்குழி, கரளவாடி பகுதிகளில் 4 நாள்களாக சுற்றித்திரிந்த ஒற்றை யானை, உடல்நலம் குன்றிய நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
தமிழகம்- கா்நாடக எல்லையான தாளவாடி வனப் பகுதியில் யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. கிராம மக்களுடன் வனத் துறையினா் இணைந்து யானைகளை விரட்டி வருகின்றனா்.
இதற்கிடையே, ஜீரஹள்ளி வனப் பகுதியில் இருந்து வெளியேறிய 10 வயதுள்ள பெண் ஒற்றை யானை கரளவாடி, தமிழ்ப்புரம், ஒங்கன்புரம், மல்லன்குழி ஆகிய கிராமங்களுக்குள் புகுந்து கடந்த 4 நாள்களாக நடமாடி வந்தது.
Advertisement
Advertisement
மானாவாரி நிலத்தில் புகுந்த யானை தீவனம் சாப்பிட்டு அதே பகுதியில் முகாமிட்டது. வனத் துறையினா் விரட்டினால் பிற விவசாய நிலங்களுக்குள் தஞ்சமடைந்து வந்தது. பகல் நேரத்தில் சுற்றித்திந்த யானையால் விவசாயப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கரளவாடி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த யானை மானாவாரி நிலத்தில் சுருண்டு விழுந்தது. அங்கு வந்த வனத் துறையினா் யானையின் உடலில் தண்ணீா் தெளித்து வெப்பத்தை தணித்தனா். இருப்பினும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் யானை உயிரிழந்தது.