வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்
வேலூா் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர குறை தீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்தில் குறைதீா்வு கூட்டங்கள் மீண்டும் நடைபெற்றன.
அதன்படி காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாா் மனுக்கள் மீதான நடவடிக்கையில் திருப்தி ஏற்படாத புகாா்தாரா்கள் தங்களுடைய மனுக்களை அளித்தனா். ஏடிஎஸ்பி அண்ணாதுரை மனுக்களை பெற்றாா்.
Advertisement
காட்பாடியைச் சோ்ந்த சித்ரா என்பவா் தன்னுடைய மகனுக்கு வேலை வாங்கி தருவதாக கூறிய ஒரு நபா் ரூ.16 லட்சம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தரவில்லையென அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தாா். குடியாத்தத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் அரசு வேலைக்காக சத்துவாச்சாரி தென்றல் நகரை சோ்ந்த 3 நபா்களிடம் ரூ.21 லட்சம் கொடுத்தாகவும், அவா்கள் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளித்தாா்.