புழல் அருகே குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்தார், அவரை காப்பாற்ற முயன்ற கணவர் தீக்காயம் அடைந்தார்.
சென்னை, மாதவரத்தை அடுத்த புழல் வள்ளூவன் நகரைச் சேர்ந்தவர் இளையராஜா (36). இவர், அதே பகுதியில் வெல்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (30). இத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இளையராஜாவுக்கு, மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், இளையராஜா புதன்கிழமை மது அருந்திவிட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த சாமுண்டீஸ்வரி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றித் தீக்குளித்தாராம். அவரை இளையராஜா காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் தீ பரவியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புழல் காவல் ஆய்வாளர் நடராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.