சிறுமி மானபங்க வழக்கு: முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
திருவள்ளூர் அருகே சிறுமி மானபங்கம் செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருவள்ளூர் அருகே சிறுமி மானபங்கம் செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே குருவாயல் திடீர் நகரைச் சேர்ந்த ரவி மனைவி நிர்மலா. அவரது 9 வயது மகள் அதே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். கணவர் ரவி உயிரிழந்த நிலையில், நிர்மலா அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். காலையில் பணிக்குச் சென்று மாலையில் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி மகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக தலை வாரிவிட்டார். அப்போது, தலையில் கீறல் இருந்தது குறித்து மகளிடம் கேட்டுள்ளார். அதற்கு பக்கத்து தெருவைச் சேர்ந்த விவசாயி மானாவாரி ஆனந்தன்(48) என்பவர் வீட்டுக்கு வந்து தன்னை மானபங்கம் செய்ததாக நிர்மலாவிடம் தெரிவித்தார். இது தொடர்பாக நிர்மலா ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆய்வாளர் அனுராதா வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தி வந்தார்.
இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி பரணிதரன் திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். மானாவாரி ஆனந்தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனையும் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசுத்தரப்பு வழக்குரைஞராக தனலட்சுமி ஆஜராகியிருந்தார். தீர்ப்பைத் தொடர்ந்து, மானாவாரி ஆனந்தன் புழல் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.