சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.2,000 முதல் தவணை: ஆட்சியர் தொடங்கி வைப்பு
சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் நோக்கத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த
சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் நோக்கத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 800 விவசாயிகளுக்கு முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வங்கிக் கணக்கு மூலம் விடுவிக்கும் திட்டத்தை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
நாடளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறு, குறு விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் விவசாயிகளிடம் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்கள் மூலம் மனுக்களும் பெறப்பட்டன. இதையடுத்து தகுதியுடைய விவசாயிகள் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு செய்யப்பட்டு, இத்திட்டத்தின் மூலம் முதல் தவணை ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை புதுதில்லியில் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். அதையடுத்து தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாவட்டம்தோறும் இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 ஏக்கருக்குள் விளைநிலம் வைத்துள்ளோராக 57,078 விவசாயிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முதல் தவணை தொகையாக ரூ.2 ஆயிரம் நிதி வங்கி மூலம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 800 விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகளில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருவள்ளுர் சார் ஆட்சியர் டி.ரத்னா, வேளாண்மை இணை இயக்குநர் ஜி.பாண்டியன், துணை இயக்குநர் (மாநில திட்டம்) எல்.சுரேஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பிரதாப் ராவ் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.