முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூரில் நடமாடும் வாகனம் மூலம் தடுப்பூசி: அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைப்பு

வயதானோர் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் பயன்பெறும் நோக்கத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் மாநில அளவில் பூந்தமல்லியில் நடமாடும் மருத்துவக் குழு வாகனத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
நடமாடும் கரோனா தடுப்பூசி செலுத்தும் வாகனத்தை தொடங்கி வைக்கும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்.
பகிர்:


திருவள்ளூர்: வயதானோர் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் பயன்பெறும் நோக்கத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் மாநில அளவில் பூந்தமல்லியில் நடமாடும் மருத்துவக் குழு வாகனத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் அருகே பூந்தமல்லியில் நகராட்சி அலுவலக வளாகத்தில் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் நடமாடும் மருத்துவக் குழு வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று நடமாடும் கரோனா தடுப்பூசி செலுத்தும் மருத்துவக் குழு தடுப்பூசி குழு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு கானா பாடல் அடங்கிய குறுந்தகடையும் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், பொது சுகாதாரத்துறை மூலம் கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் இதுவரையில் 11.70 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாகவும், இன்னும் 10.84 பேருக்கு செலுத்த வேண்டியுள்ளது. அதோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம் அமைத்து நாள்தோறும் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 46.70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், பெரியோர் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஒன்றியப் பகுதி கிராமங்களில் குடியிருப்புகளுக்கே நேரில் சென்று முன்மாதிரியாக நடமாடும் வாகன மருத்துவக் குழு தடுப்பூசி அளிக்கப்படவுள்ளது.

இதில் முதல் கட்டமாக மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பூந்தமல்லி நகராட்சிக்கு-1, பூந்தமல்லி ஒன்றிய கிராமங்களுக்கு-2, ஆவடி மாநகராட்சிக்கு-4 வாகனங்களும் தனியார் நிறுவன பங்களிப்புடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தலா மாநகராட்சி, நகராட்சி வார்டுகளில் 7 வாகனங்கள் மூலம் தடுப்பூசி என நாள்தோறும் 200 பேர் வீதம் 1400 தடுப்பூசி செலுத்தவுள்ளதாகவும், இந்த வாகனத்தில் ஒரு செவிலியர், தரவு உள்ளீட்டாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள்(பூந்தமல்லி) செந்தில்குமார், ஜவஹர்லால்(திருவள்ளூர்), ஒன்றியக்குழு தலைவர் ஜெயகுமார், துணைத் தலைவர் பரமேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.