செங்கம் அருகே வன விலங்குகளை வேட்டையாடச் சென்றதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் உள்ள வனப் பகுதியில் விலங்குகளை வேட்டையாடும் நோக்கத்துடன் இருவர் பைக்கில் நாட்டுத் துப்பாக்கியுடன் சென்றனராம். இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் செங்கம் வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில், அங்கு வந்த செங்கம் வனத் துறை அதிகாரிகள் சென்னசமுத்திரம் பகுதியில் உள்ள வனப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, நாட்டுத் துப்பாக்கியுடன் வந்த இருவரையும் மடக்கினர். அவர்களில் ஒருவர் தப்பியோடிய நிலையில், மற்றொருவருரை வனத் துறையினர் பிடித்தனர்.
விசாரணையில், செங்கம் வட்டம், திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (28), சுனில் (25) என்பதும், இருவரும் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாட வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்து, அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கி, இரு சக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சுனிலை வனத் துறையினர் தேடி வருகின்றனர்.