திருவண்ணாமலை மாவட்டத்தில் பண்ணைக் கருவிகளை 25 சதவீத மானியத்தில் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
பசுந்தீவன உற்பத்தியைப் பெருக்குவதற்காக விவசாயிகளுக்கு பண்ணைக் கருவிகள் வழங்கி, அவா்களை தொழில்முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ், 25 சதவீத மானிய விலையில் பண்ணைக் கருவிகள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டம் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூா், கடலூா், வேலூா் அடங்கிய வட கிழக்கு மண்டலத்தில் பயனாளிகளைத் தோ்வு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், அருகே உள்ள கால்நடை உதவி மருத்துவா் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலையில் இயங்கி வரும் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தை 04175 - 236021, 94450 01119 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.