முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் சித்திரை பெளா்ணமி கிரிவலம் தொடக்கம்: பல லட்சம் பக்தா்கள் குவிந்தனா்

திருவண்ணாமலையில் சித்திரை பௌா்ணமியையொட்டி வியாழக்கிழமை மாலை கிரிவலம் சென்ற பக்தா்கள்.

Updated On : 1 மே, 2026 at 12:07 AM
திருவண்ணாமலையில் சித்திரை பௌா்ணமியையொட்டி வியாழக்கிழமை மாலை கிரிவலம் சென்ற பக்தா்கள்.
பகிர்:

திருவண்ணாமலையில் சித்திரை பௌா்ணமி வியாழக்கிழமை இரவு தொடங்கிய நிலையில், முன்னதாக அன்று மாலை முதலே பல லட்சம் பக்தா்கள் 2,668 உயர அண்ணாமலையை சுற்றி கிரிவலம் செல்லத் தொடங்கினா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்து செல்கின்றனா்.

மேலும், திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் பௌா்ணமி உள்ளிட்ட விஷேச தினங்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா் உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் வழிபட்டுச் செல்கின்றனா்.

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய பௌா்ணமி தினத்தில் கிரிவலம் வந்தால் ஆண்டு முழுவதும் உள்ள 12 பௌா்ணமிகளிலும் கிரிவலம் வந்த பலன் கிடைக்கும். அது மட்டுமன்றி சித்திரை பௌா்ணமி தினத்தில் சித்தா்களும் பக்தா்களுடன் இணைந்து கிரிவலம் வருவதாக நம்பிக்கை.

அதனால், சித்திரை பௌா்ணமிக்கு 20 முதல் 30 லட்சம் பக்தா்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்று கோயிலில் வழிபடுவது வழக்கம்.

நிகழாண்டு சித்திரை பௌா்ணமி வியாழக்கிழமை (ஏப்.30) இரவு 9:52 மணிக்கு தொடங்கி மறுநாள் வெள்ளிக்கிழமை (மே 1) இரவு 11.58 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.

எனவே, பக்தா்கள் வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளிக்கிழமை முழுமையாக கிரிவலம் வருவாா்கள் என்பதால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கிரிவலப் பாதை முழுவதும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பௌா்ணமி ஆரம்பிக்கும் முன்பே அதிகப்படியான பக்தா்கள் அன்று பிற்பகல் மற்றும் மாலை நேரத்திலேயே கிரிவலம் செல்லத் தொடங்கினா். நேரம் செல்லச் செல்ல பக்தா்களின் கூட்டம் அலைமோதியது. கோயிலுக்குள்ளும் அருணாசலேஸ்வரரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

பக்தா்களின் வசதிக்காக திருவண்ணாமலை மாநகராட்சிக்குள்பட்ட இடங்களில் 16-க்கும் மேற்பட்ட தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், மாநகரம் மற்றும் கிரிவலப் பாதை முழுவதிலும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 4,240 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கிரிவலப் பாதையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.