மாமனார் அடித்துக் கொலை: மருமகன் கைது
ஆற்காடு அருகே மாமனாரை அடித்துக் கொன்ற மருமகனை போலீஸார் கைது செய்தனர்.
ஆற்காடு அருகே மாமனாரை அடித்துக் கொன்ற மருமகனை போலீஸார் கைது செய்தனர்.
ஆற்காட்டை அடுத்த கலவை மேல்புதுப்பாக்கம் புளியந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை ( 55). இவர், போளூரைச் சேர்ந்த சங்கருக்கு (35) தனது மகள் மலரை திருமணம் செய்து கொடுத்தார். திருமணத்துக்குப் பிறகு, சங்கர் மாமனார் வீட்டிலேயே தங்கியுள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சங்கர் சில நாள்களாக சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். வாரம் ஒருமுறை வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
இதனிடையே மாமனார், மருமகனிடையே சொத்து தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. கடந்த 4 நாள்களுக்கு முன்பு சங்கர் மீதான ஆத்திரத்தில் தனது மனைவி மற்றும் மகளை ஏழுமலை வீதியில் விரட்டிச் சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஊருக்கு வந்த சங்கர், ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழுமலையுடன் மோதலில் ஈடுபட்டாராம். அப்போது சங்கர் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் ஏழுமலை தலையில் பலத்த காயம் அடைந்தார்.
இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏழுமலை மீட்கப்பட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வாழப்பந்தல் போலீஸார் வழக்குப் பதிந்து, சங்கரை தேடி வந்தனர். இந்நிலையில் வெளியூருக்கு தப்பிச் செல்வதற்காக கலவை செல்லும் சாலையில் கனியனூர் பேருந்து நிறுத்தம் அருகே பதுங்கியிருந்த சங்கரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.