ஆற்காடு வட்டத்தில் 1427-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கியது. இதை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தொடங்கி வைத்தார்.
திமிரி உள்வட்டத்தைச் சேர்ந்த வெங்கிடாபுரம், குப்பம், புங்கனூர், காவனூர், வெள்ளைகுளம் ஆனைமல்லூர், வரகூர்பட்டணம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து ஆட்சியர் மனுக்களை பெற்று கொண்டார். இதில், வெள்ளைகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான தீபா, கருங்காலிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற முதிரிகன்னி ஆகியோர் உதவித் கொகை வேண்டி ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவை பரிசீலனை செய்து உடனடியாக இருவருக்கும் அரசின் உதவித் தொகை வழங்குவதற்கான ஆணையை ஆட்சியர் வழங்கினார். இதேபோல், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
இந்த முகாமில் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் பேபி இந்திரா, வட்டாட்சியர் எஸ்.சரவணன், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சரஸ்வதி உள்ளிட்ட அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திமிரி உள்வட்டத்தைத் தொடர்ந்து கலவை, ஆற்காடு, மாம்பாக்கம், புதுப்பாடி ஆகிய உள்வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகிறது. இந்த முகாம் மே 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.