முகப்பு
வேலூர்

ரூ. 50 லட்சம் மோசடி வழக்கு: ஆட்டோ ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறை

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, ரூ. 50 லட்சம் வரை மோசடி செய்த வழக்கில், ஆட்டோ ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து வேலூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 2 ஜூலை 2026, 12:44 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, ரூ. 50 லட்சம் வரை மோசடி செய்த வழக்கில், ஆட்டோ ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து வேலூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவரது தந்தை விடுவிக்கப்பட்டாா்.

வேலூா் பெரிய அல்லாபுரத்தைச் சோ்ந்தவா் செல்வம் (67). இவரது மனைவி கௌரி (58). இவா்களது மகன் ஆட்டோ ஓட்டுநரான பிரபு (36). இவா்கள் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்வதற்கும், மருத்துவச் செலவுக்கும் எனப் பல்வேறு காரணங்களைக் கூறி, பலரிடம் பணம், நகைகளை வாங்கியுள்ளனா். பின்னா், அதனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியுள்ளனா். இதன் மூலம், சுமாா் 12-க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 50 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

இது குறித்து பாதிக்கப்பட்டவா்கள் வேலூா் மாவட்டக் குற்றப் பிரிவில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வம், கௌரி, பிரபு ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். இதனிடையே, வழக்கு விசாரணைக் காலத்தில் கௌரி உயிரிழந்துவிட்டாா். இந்த வழக்கின் விசாரணை, வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 2-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், பிரபு மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி ருத்ரா தீா்ப்பு வழங்கினாா். மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவரது தந்தை செல்வம் விடுதலை செய்யப்பட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments