கோவை மாவட்டத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாமைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆட்சியர் த.ந.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
18 முதல் 21 வயதுக்கு உள்பட்ட அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்குதல் பணிகள் ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.
இதற்கான படிவங்களை வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். அஞ்சல் மூலமும் படிவங்களை அனுப்பலாம். மேலும்,
WWW.ELECTIONS.TN.GOV.IN என்ற இணையதளத்தின் மூலமும், இ-சேவை மையங்களின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
இந்தச் சிறப்புப் பணியில் இறப்புப் பதிவு செய்யப்பட்ட விவரங்கள், உள்ளாட்சி அலுவலகங்களில் இருந்து பெறப்பட்டு அதன் அடிப்படையில் பெயர்கள் நீக்கப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.