வால்பாறை-சாலக்குடி சாலையில் பேருந்துகள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்படுவதால் இரு மாநில சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ள மழுக்குப்பாறை எஸ்டேட் கேரள மாநில எல்லைப் பகுதியாகும். அதையடுத்து சுமார் 50 கி.மீ. தொலைவு சாலை அடர்ந்த வனப் பகுதியாகும். கேரள மாநிலத்தில் இருந்து வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் சாலக்குடி, அதிரப்பள்ளி அருவி வழியாக வால்பாறைக்கு வருவார்கள்.
இதேபோல தமிழகத்தில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறை வந்து பின் அதிரப்பள்ளி அருவி வழியாக கேரளத்துக்கு செல்வது வழக்கம்.
இதனிடையே கடந்த மாதம் பெய்த மழையால் இந்த சாலையில் பல இடங்களில் பெரிய அளவில் சேதமடைந்தன. தொடர்ந்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலக்குடி, மழுக்குப்பாறை எஸ்டேட் மற்றும் இடையே உள்ள பல சிறிய ஊர்களின் தபால் சேவைக்காக தற்காலிகமாக சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டு தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கார், வேன், சுற்றுலா பேருந்து போன்ற வாகனங்கள் தொடர்ந்து ஒரு மாதமாக அனுமதிக்காமல் இருப்பதால் வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் வரவு முற்றிலும் இல்லாத நிலை உள்ளது.
சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அனைத்து வாகனங்களும் செல்ல உரிய நடவடிக்கை எடுப்பதாக சாலக்குடி எம்.எல்.ஏ. தேவசி கூறினார்.