விவசாயிக்கு சொந்தமான ஆடுகளைத் தாக்கியது சிறுத்தையா? வனத் துறையினர் ஆய்வு
கோவை அருகே விவசாயிக்குச் சொந்தமான ஆடுகளைத் தாக்கியது சிறுத்தையா என்பது குறித்து வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கோவை அருகே விவசாயிக்குச் சொந்தமான ஆடுகளைத் தாக்கியது சிறுத்தையா என்பது குறித்து வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கோவை, சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிட்டுசாமி (65). இவர் தனது ஆடுகளை அருகிலுள்ள மலை அடிவாரத்தில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு செவ்வாய்க்கிழமை காலை தோட்ட வேலைக்குச் சென்றார். சிறிது நேரம் கழித்துச் சென்று பார்த்தபோது அவரது ஆடுகளில் ஒன்று இறந்த நிலையிலும், இரண்டு படுகாயங்களுடன் இருந்துள்ளன. மேலும், நான்கு மாத குட்டி ஒன்றும் அப்பகுதியில் இருந்து காணாமல்போனது.
இதையடுத்து படுகாயமடைந்த ஆடுகளை மீட்டு சிகிச்சை அளித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்தனர்.
அவர்கள் கூறுகையில், அருகில் உள்ள அய்யாசாமி மலையில் உள்ள வன விலங்குகள் எதுவும் தாக்கியிருக்க வாய்ப்புள்ளது. சிறுத்தை போன்ற வன விலங்குகள் ஒரு குறிப்பிட்ட விலங்கை மட்டுமே குறிவைத்து அதை மட்டுமே தாக்கும். ஆனால், பாதிக்கப்பட்ட விவசாயிக்குச் சொந்தமான நான்கு ஆடுகளையும் சிறுத்தைத் தாக்கியதாகக் கூறுகின்றனர்.
இப்பகுதியில் உள்ள வெறி நாய்கள் கூட ஆடுகளைத் தாக்கியிருக்க வாய்ப்புள்ளது. மேலும், ஆய்வு செய்யப்பட்ட இடங்களில் சிறுத்தையின் கால்தடங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றனர்.
இப்பகுதியில் சுற்றித் திரிவது சிறுத்தைதான் என்றும் உடனடியாக அதைப் பிடிக்க கூண்டு வைக்குமாறு வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், முழுமையாக ஆய்வு செய்து சிறுத்தை என உறுதி செய்த பின்னரே அதைப் பிடிப்பதற்கு கூண்டு வைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இப்பகுதியில் இரவு நேரத்தில் வனத் துறை ஊழியர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல பூலுவபட்டி அருகே விவசாயிக்குச் சொந்தமான ஐந்து ஆடுகள், நான்கு நாட்டுக் கோழிகளை சிறுத்தை ஜனவரி 18 ஆம் தேதி தாக்கியதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.