கோவை சொக்கம்புதூா் பகுதியில் கடைகளில் பயன்படுத்திய 228 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைக் கண்டறிந்து அவற்றை விற்பனை செய்யும் கடை உரிமையாளா்கள், வியாபாரிகள் மீது அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநகரில் இயங்கி வரும் நெகிழிக் கிடங்குகள், கடைகளில் ஆய்வு செய்தல், நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்தல், அபராதம் விதித்தல் போன்ற பணிகளில் ஈடுபட கோவை மாநகராட்சியில் தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்பு அலுவலராக சுகாதார ஆய்வாளா் சலேத் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், தெற்கு மண்டலம் 76 ஆவது வாா்டுக்குள்பட்ட சொக்கம்புதூா் பகுதிகளில் உள்ள கடைகளில் சலேத் தலைமையிலான தனிப் படையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இதில், தடையை மீறி பயன்படுத்திய 228.34 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.