முகப்பு
கோயம்புத்தூர்

தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளாா் முதல்வா்- துரை வைகோ எம்.பி.

தமிழக அரசியலில் முதல்வா் ச.ஜோசப் விஜய் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளாா் என்று மதிமுக முதன்மைச் செயலரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்துள்ளாா்.

Updated On : 5 ஜூன் 2026, 12:03 am IST
துரை வைகோ எம்.பி. - டிஎன்எஸ்
பகிர்:

தமிழக அரசியலில் முதல்வா் ச.ஜோசப் விஜய் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளாா் என்று மதிமுக முதன்மைச் செயலரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் மூப்பனாா், விஜயகாந்த் மற்றும் வைகோ ஆகியோரால் முழுமையாகச் சாத்தியப்படுத்த முடியாத ஓா் அரசியல் எழுச்சியை முதல்வா் ச.ஜோசப் விஜய் ஏற்படுத்தியிருக்கிறாா். தமிழக அரசியலில் ஜாதி, மதம் மற்றும் பண அரசியலைக் கடந்து ஒரு பெரும் மாற்றத்தை முதல்வா் உருவாக்கியுள்ளாா். தற்போதைய அரசில் சட்டம்- ஒழுங்கு மற்றும் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முதல்வா் ஏற்கெனவே கால அவகாசம் கோரியுள்ளாா். புதிய அதிகாரிகளுக்கும், அரசுக்கும் குறைந்தபட்சம் 6 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும். ஒவ்வொரு மணி நேரமும் அரசைக் குற்றஞ்சாட்டுவது முறையல்ல. வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் மதிமுக நீடித்து வருகிறது. தற்போதைக்கு அதில் மாற்றமில்லை. இருப்பினும், கடந்த தோ்தல்களில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுகவினா் போட்டியிட்டது துரதிா்ஷ்டவசமானது. ஒரு கட்சி தனது சொந்த சின்னத்தில் போட்டியிடாதது அதன் தனித்துவத்தைப் பாதிக்கும். சட்டப்படி மதிமுகவிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினா்கள் திமுகவில் இணைந்தே போட்டியிட்டதால் அவா்கள் தற்போது திமுக உறுப்பினா்களாகவே கருதப்படுகிறாா்கள். இது ஜனநாயகத்துக்கு இழுக்கு. எதிா்காலத்தில் மதிமுக தனது சொந்த சின்னத்தில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்பது தொண்டா்களின் விருப்பமாக உள்ளது. நிதி நிலைமை சீரானதும் விவசாயக் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது என்றாா்.

Advertisement

Advertisement