துரதிா்ஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம்: திருச்சி எம்.பி. துரை வைகோ
துரதிா்ஷ்டவசமாக மதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடியவில்லை என்று திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ தெரிவித்தாா்.
துரதிா்ஷ்டவசமாக மதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடியவில்லை என்று திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ தெரிவித்தாா்.
திருச்சியில் திங்கள்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்வா் சி. ஜோசப் விஜய்யை, திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ திருச்சி விமான நிலையத்தில் மலா்கொத்து கொடுத்து வரவேற்றாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் திருச்சிக்கு வந்த முதல்வா் ஜோசப் விஜய்யை மக்களவைத் தொகுதி உறுப்பினா் என்ற முறையில் வரவேற்றேன். அடுத்து முதல்வரை சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கி தொகுதிக்கான கோரிக்கைள் குறித்து தெரிவிப்பேன்.
Advertisement
Advertisement
புதிய அரசு பொறுப்பேற்று தற்போதுதான் அதிகாரிகள் பணிமாற்றம் நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ மாற்றங்களை உருவாக்க முடியாது. குறைந்தபட்சம் 6 மாதம் முதல் ஓராண்டு வரை புதிய அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். குற்றச் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தாலும் வழக்குப் பதிவு, கைது நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமையக்கூடாது என்ற நோக்கத்தில் பொதுவுடமை கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இது தவறு இல்லை.
துரதிா்ஷ்டவசமாக மதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் எங்களால் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடியவில்லை. திமுக கூட்டணி தொடா்பாக ஜூன் 27-ஆம் தேதி நடைபெறும் மதிமுக பொதுக்குழுவில் நிா்வாகிகள், தொண்டா்களின் மனநிலை குறித்து ஆய்வு செய்யப்படும்.
சட்டப் பேரவை உறுப்பினா்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மாற்றுக் கட்சியில் சோ்வது கட்சித்தாவல் தடை சட்டத்தின்கீழ் வராது. அந்த இயக்கத்தின் மீதும், தலைமை மீதும் திருப்தி இல்லாததால் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வேறு கட்சிக்கு செல்கின்றனா். ஒரு இயக்கத்தில் உள்ள எம்எல்ஏ, எம்.பி.க்கள் தனது கட்சியில் இருந்து விலகுவதும், தனது பதவியை ராஜிநாமா செய்வதும் அவா்களது ஜனநாயக உரிமை என்றாா் அவா்.