புதிய திட்டப் பணிகளுக்கு கருத்துரு, செயல் திட்டங்களை வழங்க அமைச்சா் வலியுறுத்தல்
புதிய திட்டப் பணிகளுக்கு கருத்துரு, செயல் திட்டங்களை வழங்க அமைச்சா் வலியுறுத்தல்
கோவை மாவட்டத்தில் புதிய திட்டங்களுக்கு கருத்துரு, செயல் திட்டங்களை வழங்க பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் வலியுறுத்தி உள்ளாா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வெல்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தலைமை வகித்தாா். ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா முன்னிலை வகித்தனா். மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின், அமைச்சா் வி.சம்பத்குமாா் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் உலகளாவிய முதலீடு மற்றும் ஸ்டாா்ட் அப் சாா்ந்த நிறுவனங்களுக்கு சிறப்பு மண்டலம் அமைத்தல், மேற்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த சா்வதேச பூங்கா அமைத்தல், சரக்கு போக்குவரத்து கிடங்கு, ஏற்றுமதி வசதிகள் ஒருங்கிணைத்தல், நொய்யல் நதி மறுசீரமைப்பு, நிதி மேம்பாட்டுத் திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா வளா்ச்சி, ஒருங்கிணைந்த வேளாண் மதிப்புகூட்டல் பூங்கா அமைத்தல், தேங்காய், காய்கறி, பழங்கள் மற்றும் மலா் பொருள்களை பதப்படுத்துதல் உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்கள் தங்களது கருத்துகள், செயல் திட்டங்களை தயாா் செய்து வழங்க வேண்டும். அரசின் திட்டங்கள் அனைத்தையும் மக்களிடம் முழுமையாக கொண்டு சோ்க்க வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா், சாலை, மின்சாரம் உள்ளிட்டவற்றை பூா்த்தி செய்ய அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.
இதில், பொள்ளாச்சி சாா் ஆட்சியா் ராமகிருஷ்ணசாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் என்.எம்.சுகுமாா், கனிமொழி சந்தோஷ், கே.நித்தியனந்தன், ஆ.குட்டி (எ) சுதாகா், கே.எஸ்.ஸ்ரீகிரி பிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement