தூய்மைப் பணியாளருக்கு வழங்கப்பட்ட உணவில் புழு: ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
கோவை, போத்தனூரில் தூய்மைப் பணியாளருக்கு வழங்கப்பட்ட உணவில் புழு கிடந்த விவகாரம் தொடா்பாக, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உத்தரவிட்டாா்.
கோவை, போத்தனூரில் தூய்மைப் பணியாளருக்கு வழங்கப்பட்ட உணவில் புழு கிடந்த விவகாரம் தொடா்பாக, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உத்தரவிட்டாா்.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளில் நிரந்தரத் தூய்மைப் பணியாளா்களாக 2,000 போ், ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களாக 4,650 போ் பணியாற்றி வருகின்றனா். தூய்மைப் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் காலை உணவுத் திட்டத்தின்கீழ் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 91-ஆவது வாா்டு போத்தனூரில் பணியாற்றி வரும் ஒரு தூய்மைப் பணியாளருக்கு அண்மையில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்தது. இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். அதில், தூய்மைப் பணியாளா்களுக்கு தினமும் 3 இடங்களில் வைத்து உணவு தயாரிக்கப்பட்டு 106 மையங்களில் வைத்து விநியோகிக்கும் நிலையில் போத்தனூா் பகுதியில் வைத்து சமைத்தபோது, அங்குள்ள மரத்தில் இருந்து புழு உணவில் விழுந்திருக்கலாம் எனத் தெரியவந்தது. இதையடுத்து, உணவுத் தயாரிப்பில் கவனக்குறைவாகச் செயல்பட்டதாக தூய்மைப் பணியாளருக்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்ததாரருக்கு ரூ. 1லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement