அரசு விடுதிகளில் இப்படித்தான் உணவு வழங்கப்படும்.. அதிகாரி பதிலால் மாணவிகள் வேதனை!
ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி பற்றி...
கோவை, ஒண்டிப்புதூர் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை, ஒண்டிப்புதூர் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் தரம் குறைந்த மற்றும் சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடந்தது. மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 13 மாணவிகள் விடுதிகளும் 13 மாணவர்கள் விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் மாநகராட்சிக்கு உள்பட்ட விடுதிகளுக்கு வெள்ளலூரில் உள்ள ஒருங்கிணைந்த சமையல் மையத்தில் இருந்து உணவு சமைத்து வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், ஒண்டிப்புதூர் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு மற்றும் கரப்பான் பூச்சிகள் இருந்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவிகள் துணை ஆட்சியருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பி இருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.
Advertisement
Advertisement
இதுகுறித்துப் பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறும்போது,
கடந்த பத்து மாதங்களாகவே தரமற்ற உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், விடுதி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆட்சியர் அலுவலகத்திற்குப் புகார் அனுப்பினோம். ஆனால் அங்கியிருந்து தொடர்பு கொண்ட அதிகாரி ஒருவர், அரசு விடுதிகளில் இப்படித்தான் உணவு வழங்கப்படும், பொறுப்பற்ற முறையில் பதில் அளித்தார். தற்பொழுது உணவு வழங்கும் முறை குறித்து மாணவிகள் கருத்து தெரிவிக்குமாறு கேட்டு உள்ளதாகக் கூறி உள்ளனர்.