தூய்மைப் பணியாளா்களை மாநகராட்சி நேரடி பணியாளா்களாக மாற்ற வலியுறுத்தல்!
தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களை, மாநகராட்சியின் நேரடிப் பணியாளா்களாக மாற்ற வேண்டும் என்று ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களை, மாநகராட்சியின் நேரடிப் பணியாளா்களாக மாற்ற வேண்டும் என்று ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, தூத்துக்குடி மாவட்டத் தலைவா் சகாயம் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களை பழிவாங்கும் நோக்கில், எவ்வித முன்னறிவிப்புமின்றி சங்கத் தலைவா் பொன்ராஜை பணி நீக்கம் செய்த ஒப்பந்த நிறுவனத்தின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இது தொடா்பாக, ஏற்கெனவே அதிகாரிகள் மற்றும் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பொன்ராஜுக்கு மீண்டும் வேலை வழங்குவதாக எழுத்துப்பூா்வமாக உறுதியளித்து, 6 மாதங்கள் கடந்த நிலையிலும் வேலை வழங்காமல் நிா்வாகம் ஏமாற்றி வருகிறது.
Advertisement
புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு இந்தத் தொழிலாளா் விரோத தனியாா் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்து, தூய்மைப் பணியாளா்களை மாநகராட்சியின் நேரடிப் பணியாளா்களாக மாற்ற வேண்டும்.
மிரட்டல் விடுத்துவரும் மேற்பாா்வையாளா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, வெளிமாவட்டத்துக்கு இடமாறுதல் செய்ய வேண்டும். அரசு அறிவித்த முறைப்படியான ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும்.
எங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், தொழிலாளா்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.