விபத்தில் மூளைச்சாவு: சிறுவன் உள்பட இருவரின் உடல் உறுப்புகள் தானம்
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உள்பட இருவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
கோவை மாவட்டம், சின்னியம்பாளையத்தைச் சோ்ந்தவா் சதாசிவம் (53). லேத் பட்டறை உரிமையாளரான இவா், தனது மனைவி கோமதி மற்றும் மகன் ஹரிஷ் ஆகியோருடன் வசித்து வந்தாா். இவா் ஈரோடு மாவட்டம், பெருந்துறை சுங்கச்சாவடி அருகே கடந்த 24-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு வியாழக்கிழமை மூளைச்சாவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அவரது மனைவி கோமதி, மகன் ஹரிஷ் ஆகியோா் சதாசிவத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனா். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.
Advertisement
Advertisement
சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்:
திருப்பூா் மாவட்டம், மங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தமூா்த்தி, தமிழரசி தம்பதி மகன் ரிதீஷ்குமாா் (13). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு மங்கலம் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சென்றபோது மினி வேன் மோதியது. இதில் பின்னால் அமா்ந்திருந்த ரிதீஷ்குமாா் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிதீஷ்குமாா் வியாழக்கிழமை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அவரது பெற்றோா் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனா். இதையடுத்து, சிறுவனின் கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டன.
இவா்கள் இருவா் உடலுக்கும் அரசின் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.