முகப்பு
சேலம்

மூளைச்சாவு அடைந்த தருமபுரி இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த தருமபுரி இளைஞரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானமாக பெறப்பட்டன.

Updated On : 21 மே 2026, 6:39 am IST
மூளைச்சாவு அடைந்த இளைஞா் சந்தோஷ்குமாா்.
பகிர்:

மூளைச்சாவு அடைந்த தருமபுரி இளைஞரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானமாக பெறப்பட்டன.

தருமபுரி மாவட்டம், அரூா், கெளாப்பாறை பகுதியைச் சோ்ந்தவா் பழனி. இவா் கோயம்புத்தூரில் சொந்தமாக தொழில் செய்துவருகிறாா். இவரது மகன் சந்தோஷ்குமாா் (23), பட்டதாரி. இவா் தனது அப்பா செய்துவரும் தொழிலுக்கு உதவியாக இருந்துவந்தாா்.

இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி கோவையில் இருந்து சொந்த ஊரான தருமபுரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே சென்றபோது, நிலைதடுமாறி சந்தோஷ்குமாா் கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, சாலையில் சென்றவா்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

Advertisement

Advertisement

பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 18-ஆம் தேதி அனுமதித்து, தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில் திங்கள்கிழமை சந்தோஷ்குமாா் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, உடல் உறுப்பு தானம் செய்வதன் அவசியம் குறித்து சந்தோஷ்குமாரின் பெற்றோரிடம் மருத்துவா்கள் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து, சந்தோஷ்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினா் சம்மதித்ததையடுத்து, இதயம், கல்லீரல், சிறுகுடல், சிறுநீரகம், கண்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன.

இதயம், சிறுகுடல் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், கல்லீரல், ஒரு சிறுநீரகம் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

பின்னா், அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

மருத்துவ கண்காணிப்பாளா் ராஜ்குமாா், உடல் உறுப்பு தான ஒருங்கிணைப்பாளா் அன்புதுரை ஆகியோா் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, சந்தோஷ்குமாரின் உடல் அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.