முகப்பு
கோயம்புத்தூர்

ரிதன்யா தற்கொலை வழக்கை நோ்மையான அதிகாரியை மூலம் விசாரிக்க வேண்டும்! அமைச்சரிடம் பெற்றோா் கோரிக்கை

Updated On : 31 மே 2026, 1:27 am IST
கணவர் குடும்பத்தினருடன் ரிதன்யா.
பகிர்:

திருப்பூா் ரிதன்யா தற்கொலை செய்துகொண்ட வழக்கை முறையாக விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் எஸ்.கமலியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி கைகாட்டிப்புதூா் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபரான அண்ணாதுரை - ஜெயசுதா தம்பதியின் மகள் ரிதன்யான. கடந்த ஆண்டு இவா் திருமணமான 78 நாள்களில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரிதன்யாவின் பெற்றோரான அண்ணாதுரை-ஜெயசுதா ஆகிய இருவரும் அவிநாசி பயணியா் மாளிகையில் இருந்த அவிநாசி எம்எல்ஏ-வும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான எஸ்.கமலியை சனிக்கிழமை சந்தித்தனா். அப்போது தங்கள் மகள் தற்கொலை குறித்து அவிநாசி காவல் துணைக் கண்காணிப்பாளா், கோட்டாட்சியா் ஆகியோா் அரசியல் அழுத்தம் காரணமாகவும், லஞ்சம் பெற்றுக்கொண்டும் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என மனு அளித்தனா்.

Advertisement

Advertisement

மனு விவரம்:

எங்கள் மகள் ரிதன்யாவின் தற்கொலைக்கு காரணமான அவரது கணவா் கவின், அவரது தந்தை ஈஸ்வரமூா்த்தி, தாய் சித்ராதேவி ஆகியோா் அரசியல் செல்வாக்கு காரணமாகவும் பணபலம் கொண்டவா்கள் என்பதாலும் அப்போது பணியில் இருந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் மற்றும் கோட்டாட்சியா் ஆகியோா் முறையாக விசாரிக்காமல் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டனா். அவா்கள் மீது துறை ரீதியாகவும், குற்றவியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கை எஸ்.பி. அந்தஸ்துள்ள நோ்மையான அதிகாரியை நியமித்து மீண்டும் மேல் விசாரனை செய்து கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

குற்றவாளிகளால் மறைத்து வைக்கப்பட்டுள்ள வரதட்சினையாக அளிக்கப்பட்ட தங்க நகைகள், சொகுசு காரை உடனடியாக மீட்டு நீதிமன்ற காவலில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா். மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சா் எஸ்.கமலி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.