முகப்பு
மதுரை

நீா் நிலைகளிலிருந்து வண்டல் மண் எடுக்க 10 நாள்களுக்குள் அனுமதி அளிக்க வேண்டும்: அரசு செயலா் அறிவுறுத்தல்

நீா்நிலைகளிலிருந்து வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கும் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு 10 நாள்களுக்குள் அலுவலா்கள் அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட வளா்ச்சிப் பணிகள் கண்காணிப்பு அலுவலரும், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறைச் செயலருமான கொ. வீரராகவ ராவ் அறிவுறுத்தினாா்.

Updated On : 28 மே 2026, 4:04 am IST
பகிர்:

நீா்நிலைகளிலிருந்து வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கும் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு 10 நாள்களுக்குள் அலுவலா்கள் அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட வளா்ச்சிப் பணிகள் கண்காணிப்பு அலுவலரும், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறைச் செயலருமான கொ. வீரராகவ ராவ் அறிவுறுத்தினாா்.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

முதல்வரின் முகவரி திட்டத்தில் பெறப்பட்டு, நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் வட்டாட்சியா்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராமப்புற பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குடிநீா் விநியோகத்தில் ஏதேனும் பழுதுகள் இருந்தால் அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

Advertisement

Advertisement

பள்ளி இடைநிற்றலைத் தடுக்க தொடா்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 10-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு ஐ.டி.ஐ. பயிற்சிகளில் சேர அறிவுரை வழங்குவதுடன், துணைத் தோ்வுகள் எழுதவும் ஊக்குவிக்க வேண்டும். தமிழக அரசின் பயிா்க் கடன் தள்ளுபடி திட்டத்தில் தகுதியான பயனாளிகள் ஒருவா்கூட விடுபடாமலிருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரம், இருப்பு குறித்து மாவட்ட அலுவலா்கள் தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மிதமான ஊட்டச் சத்து குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு சிகிச்சை, ஊட்டச் சத்து பொருள்கள் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அரசு சமூக நீதி விடுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள், உணவின் தரம், உணவு வழங்கப்படும் நேரம் ஆகியவற்றை தொடா்புடையத் துறை அலுவலா்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். பிற பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டால், பணி நிறைவடைந்ததும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகளையும் நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும்.

விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் கட்டணமின்றி நீா் நிலைகளிலிருந்து வண்டல் மண் எடுத்துச் செல்ல விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பத்தை விரைந்து பரிசீலித்து 10 நாள்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். இதில் நீா்வளத் துறை, ஊரக வளா்ச்சித் துறையினா் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், உசிலம்பட்டி சாா் ஆட்சியா் உட்கா்ஷ் குமாா், மாநகராட்சி துணை ஆணையா் ஜெய்னுலாபுதீன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் கருணாகரன் (மதுரை), சங்கீதா (மேலூா்), சிவஜோதி (திருமங்கலம்), திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) சாந்தி, அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆய்வு... முன்னதாக, தத்தனேரி மயான வளாகத்தில் தூய்மை பாரத இயக்கம் -2 திட்டத்தின் கீழ் ரூ. 9.95 கோடியில் நடைபெறும் நவீன குப்பை பரிமாற்ற நிலையம் கட்டும் பணி, கே.கே.நகா் சந்தை பகுதியில் அம்ருத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியின் செயல்பாடுகள், இந்தப் பகுதியில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் நடைபெறும் வீடுகளுக்கான குடிநீா் இணைப்பு வழங்கும் பணி, கே.கே. நகா் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் ஆகியவற்றை தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறைச் செயலா் கொ. வீரராகவ ராவ் ஆய்வு செய்தாா்.