அந்தியூர் - பர்கூர் - கொள்ளேகால் சாலை இருவழித் தடமாக மாற்றம்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து கர்நாடக மாநிலம், கொள்ளேகாலுக்கு பர்கூர் மலைப் பகுதி வழியாகச் செல்லும் மலைப் பாதை 42 கி.மீ. தொலைவுக்கு
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து கர்நாடக மாநிலம், கொள்ளேகாலுக்கு பர்கூர் மலைப் பகுதி வழியாகச் செல்லும் மலைப் பாதை 42 கி.மீ. தொலைவுக்கு ரூ. 72.90 கோடியில் இரு வழித் தடமாக மாற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
அந்தியூர் சட்டப் பேரவைத் தொகுதி, பர்கூர் ஊராட்சி, தாமரைக்கரையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் சாலை விரிவுபடுத்தும் பணி தொடக்கம், தமிழ்நாடு மின்சார வாரிய பர்கூர் பிரிவு அலுவலகம் திறப்பு மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தியூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஈஎம்ஆர்.ராஜா முன்னிலை வகித்தார்.
இதில்,பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பங்கேற்றுப் பணிகளைத் தொடக்கிவைத்தனர்.
இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அந்தியூர் செல்லம்பாளையம் - பர்கூர் - கொள்ளேகால் சாலை வரை இருவழித்தடமாக 42 கி.மீ. தொலைவுக்கு ரூ. 72.90 கோடி மதிப்பீட்டில் 8.80 மீட்டர் அகலத்துக்கு விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படுகிறது. மிகவும் குறுகலாக உள்ள பகுதிகளில் மலைச் சாலை, கையேடுகளின்படியும், பள்ளத்தாக்குப் பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு பாதுகாப்புச் சுவர், மழைநீர் வடிந்து செல்ல 46 சிறுபாலங்கள், பழுதடைந்த 236 சிறுபாலங்கள் சீரமைப்பு செய்யப்படுகின்றன என்றார்.
இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மின்வாரியத் தலைமைப் பொறியாளர் சந்திரசேகர், மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜு விஸ்வநாதன், கோபி கோட்டாட்சியர் அசோகன், அந்தியூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் டி.எஸ்.மீனாட்சி சுந்தரம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் எஸ்.பி.ரமேஷ், அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலர் இ.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.