சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 22 பேர் கைது
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட இந்து முன்னணியைச் சார்ந்த 22 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட இந்து முன்னணியைச் சார்ந்த 22 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெருந்துறை அருகே பொன்னாண்டன்வலசை சேர்ந்தவர் பழனிசாமி மனைவி அமராவதி(44). இவர்களது மகள் பவித்ரா (18), காஞ்சிக்கோவில் அரசுப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அமராவதியின் தம்பி திருமுருகன்( 42). இவரது மனைவி ஞானம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன் திருமுருகன் வீட்டில் அமராவதி, பவித்ரா, ஞானம்மாள் உள்ளிட்ட சிலர் இருந்தபோது வந்த ஒரு கும்பல் மதம் மாற வலியுறுத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அமராவதி, பவித்ரா ஆகியோர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மதம் மாற்றம் செய்ய வலியுறுத்தி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணியினரும், அமராவதியின் உறவினர்களும் அரசு மருத்துவமனை அருகே திடீர் மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
பெருந்துறை அருகே பொன்னாண்டன்வலசில் ஒரு சில குடும்பத்தினரை மதம் மாற்றம் செய்ய வேண்டும் என சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், பெருந்துறை காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தனியாக இருந்த அமராவதி, பவித்ரா உள்பட 5 பேரை மதம் மாற வேண்டும் என வலியுறுத்தி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டனர்.
இதையடுத்து, அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்பட 22 பேரை போலீஸார் கைது செய்தனர்.