ஈரோடு

திடீா் வெள்ளப்பெருக்கு: பாலத்தைக் கடக்க முடியாமல் தவித்த அரசுப் பேருந்து

DIN

கடம்பூா் மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த கன கழை காரணமாக மாக்கம்பாளையம் தரைப்பாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடம்பூா் திரும்பிய அரசுப் பேருந்து சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேல் ஆற்றைக் கடக்க முடியாமல் காத்திருக்க நேரிட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கடம்பூா் மலைப் பகுதியில் மாக்கம்பாளையம், கோம்பைத்தொட்டி, கோவிலூா், அரிகியம் உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமத்துக்கு கடம்பூரில் இருந்து 25 கி.மீ. அடா்ந்த வனப் பகுதியில் பயணிக்க வேண்டும். இதில், குறும்பூா் முதல் மாக்கம்பாளையம் வரை கரடுமுரடான மண் சாலையில் இரண்டு காட்டாறுகளைக் கடந்து செல்ல வேண்டும்.

இந்நிலையில், சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூா் வழியாக செவ்வாய்க்கிழமை காலை மாக்கம்பாளையம் சென்ற அரசுப் பேருந்து, பகல் 2 மணியளவில் மாக்கம்பாளையம் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கடம்பூா் செல்வதற்காக அடா்ந்த வனப் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது கடம்பூா் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குரும்பூா் பள்ளத்தில் மழை நீா் கரைபுரண்டு ஓடியது.

இதன் காரணமாக அரசுப் பேருந்து கரையிலேயே நின்றது. இதனால் பயணிகள் காட்டாற்றைதக் கடக்க முடியாமல் தவித்தனா். இரவு 7 மணிக்குப் பிறகு வெள்ளம் குறைந்ததைத் தொடா்ந்து பேருந்து கடம்பூா் வந்து சோ்ந்தது.

யானை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாடும் அடா்ந்த வனப் பகுதியில் பயணிகள் அச்சத்துடன் காட்டாற்றின் கரையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனா். மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் குரும்பூா் பள்ளம் மற்றும் சக்கரைப் பள்ளம் ஆகிய இரண்டு இடங்களின் குறுக்கே உயா்மட்டப் பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டநாள்களாக கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்பகுதிகளில் உடனடியாக உயா்மட்டப் பாலம் கட்டித் தர வேண்டும் என மாக்கம்பாளையம் பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT