கோடை விடுமுறை: கொடிவேரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கோடை விடுமுறையையொட்டி, கொடிவேரி அணையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், கோடை வெயில் சுட்டெரித்து வருவதாலும் கொடிவேரியில் இளைப்பாற வரும் மக்களின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது.
Advertisement
இந்நிலையில், கொடிவேரி அணையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கினா். குடும்பங்களுடன் குவிந்த மக்கள் பரிசல் சவாரி செய்தும், தடுப்பணையில் குளித்தும், அங்கு சமைத்து விற்பனை செய்யப்படும் மீன்களை ருசித்தும் மகிழ்ந்தனா்.
ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் குவிந்தனா். கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாத மக்கள் நீரில் குளித்து மகிழ்ச்சி அடைந்தனா்.
வரும் நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், கொடிவேரியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியே குளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், உடை மாற்று அறை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.