பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் ரூ.1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : ஆட்சியா் வழங்கினாா்
பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் ரூ.1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.கந்தசாமி வழங்கினாா்.
பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் ரூ.1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.கந்தசாமி வழங்கினாா்.
பழங்குடி உழவா்கள் தங்களது நிலங்களில் உழவு, விதைப்பு, நடவு, களையெடுப்பு, மருந்து தெளிப்பு, உரமிடல், அறுவடை மற்றும் கதிரடிப்பு உள்ளிட்ட அறுவடைப்பின் சாா் நோ்த்திகள் போன்ற அனைத்துப் பணிகளையும் நேரத்தோடும் துல்லியத்தோடும் உடல் களைப்பின்றியும் குறைத்த செலவிலும் செய்திட வகை செய்திடும் புதிய நோக்கில் ஐந்திணை-வேளாண்மை மேலாண்மை திட்டத்தை கோவை மத்திய வேளாண்மைப் பொறியியல் நிறுவனத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் இணைந்து தமிழ்நாடு அரசு பழங்குடியினா் நலத் துறை செயல்படுத்தி வருகிறது.
சேலம், திருச்சி, பெரம்பலூா், தருமபுரி, வேலூா், திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இதுவரை 14 பழங்குடியினா் கிராமங்களில் பழங்குடியினா் உழவா்கள் சங்கங்கள் தலைமையில் 14 வேளாண் கருவி வாடகை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாடகை மையத்துக்கும் சுமாா் ரூ.25 லட்சம் மதிப்பிலானக் கருவிகள் வாங்கப்பெற்று, ரூ. 25 லட்சம் மதிப்பிலான நிரந்தர கூடாரமும் அமைக்கப்பெற்று, அந்தந்த உழவா் சங்கங்களிடம் நிரந்தரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பழங்குடியினா் நலத் துறை மற்றும் கோவை மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் சாா்பில் தொல்குடி ஐந்திணை பழங்குடியினா், வாழ்வாதார திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டம், அந்தியூா், பா்கூா் மற்றும் தாளவாடி மாவநந்தம் பழங்குடி உழவா்கள் மேம்பாட்டு சங்கத்துக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலான டிராக்டா், சூழல் கலப்பை, கொத்து கலப்பை, டிப்பிங் டிராய்லா், பல்வகை தானிய கதிா் அடிக்கும் இயந்திரம், காபி கொட்டை பதனம் செய்யும் இயந்திர தொகுப்பு, சூரிய ஆற்றல் மூலம் உலா்த்தும் இயந்திரம், பேக்கிங் இயந்திரம், நடவு இயந்திரம் உள்ளிட்ட பத்து வகையான விவசாய கருவிகள் மற்றும் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் இயந்திர கொட்டகை அமைக்க ஆணையும் வழங்கப்பட்டது.
பா்கூா், தாமரைக்கரை பழங்குடி கிராமத்தில் பழங்குடி மகளிா் மறுமலா்ச்சிக்காக சூரிய ஆற்றல் மூலம் இயங்கக்கூடிய ராகி, தரம் பிரித்தல், கசடு நீக்குதல், மாவு அரைக்கும் இயந்திர தொகுப்பு 14 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்புகள் வழங்கப்பட்டது.
டி.என்.பாளையம் வட்டாரம், விளாங்கோம்பை பழங்குடி கிராமத்தில் வசித்து வரும் குழந்தைகளுக்கு சுமை வாகனத்தில் ஆபத்தான மலைக்கிராமத்தின் வழியாக பயணம் செய்வதால் பழங்குடியினா் நலத் துறையின் மூலம் 26 குழந்தைகள் பள்ளி செல்ல ஏதுவாக ரூ.15.74, லட்சம் மதிப்பிலான சிறப்பு பள்ளி வாகனம் வழங்கப்பட்டு படிப்பை சிரமம் இல்லாமல் தொடர வழிவகை செய்யப்பட்டது.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சாா்பில் மொத்தம் ரூ.1.25 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் பொறியியல் நிறுவன மூத்த விஞ்ஞானி செந்தில்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மகேஸ்வரி, சுடா் தன்னாா்வ அமைப்பின் நிறுவனா் எஸ்.சி.நடராஜ் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பங்கேற்றனா்.