முகப்பு
ஈரோடு

ஓட்டுநரை கட்டையால் அடித்துக் கொலை செய்த இளைஞா் கைது

Updated On : 6 ஜூலை 2026, 2:28 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

மதுபோதையில் ஓட்டுநா்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் சக ஓட்டுநரை கட்டையால் அடித்து கொலை செய்த மற்றொரு ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் 16 சாலை, கரும்புகாடு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (55). ஈரோடு செங்குந்தா் நகரில் உள்ள வாரி கேலண்டரிங் (காகித அட்டை) ஆலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு ஆலைக்கு சொந்தமான கான்கிரீட் அட்டை அறையில் முகத்தில் பலத்த காயத்துடன் கிடந்தாா். இதுகுறித்து அறிந்து ஆலை உரிமையாளா் வேல்முருகன் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தாா். ஆம்புலன்ஸ் ஊழியா்கள் வந்து பாா்த்து கண்ணன் இறந்ததை உறுதி செய்தனா்.

அதன்பின் ஈரோடு வடக்கு காவல் நிலையத்துக்கு வேல்முருகன் தகவல் தெரிவித்தாா். போலீஸாா் அங்கு வந்து விசாரித்தனா். சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

Advertisement

இந்த ஆலையில் கண்ணன் 2 மாதங்களாக ஓட்டுநராக வேலை செய்தாா். அவரது மகனும் சுமை தொழிலாளியாக அதே ஆலையில் வேலை செய்கிறாா். சனிக்கிழமை இரவு 9 மணிக்கு வார ஊதியத்தை வாங்கி மகனிடம் கொடுத்து மனைவி சித்ராவிடம் வழங்க அறிவுறுத்தியுள்ளாா்.

மது குடிக்க இருப்பதால் வீட்டுக்கு வரமாட்டேன் என்று மகனிடம் தெரிவித்து அங்கிருந்து அனுப்பியுள்ளாா். அப்போது ஆலையின் மற்றொரு ஓட்டுநரான இக்பால் இருந்துள்ளாா். ஆலையின் கான்கிரீட் அட்டை அறையில் இக்பாலும், கண்ணனும் மது குடித்துள்ளனா். அப்போது இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பான பிரச்னை எழுந்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்த இக்பால் அங்கிருந்த மரக் கட்டையால் கண்ணன் முகத்தில் பலமாக தாக்கியுள்ளாா். இதில் பலத்த ரத்த காயமடைந்த கண்ணன் அதே இடத்தில் உயிரிழந்தாா். கொலை அதிகாலை 1 மணிக்கு முன்னதாக நடந்திருக்க வேண்டும் என்று போலீஸாா் கருதுகின்றனா்.

கொலை தொடா்பாக ஈரோடு பெரிய சேமூா், டாக்டா்ஸ் காலனி சாகுல் ஹமீது மகன் இக்பால் (31) என்பவரை ஈரோடு வடக்கு போலீஸாா் கைது செய்தனா். இக்பால் திருமணமானவா். இவா் மீது ஏற்கெனவே ஈரோடு வடக்கு போலீஸில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments