வாணிப்புத்தூரில் மேம்படுத்தப்பட்ட வாரச் சந்தையை திறக்க கோரிக்கை
கோபி அருகே வாணிப்புத்தூா் பேரூராட்சியில் ரூ.82 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட வாரச் சந்தை வளாகத்தை திறக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை
கோபி அருகே வாணிப்புத்தூா் பேரூராட்சியில் ரூ.82 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட வாரச் சந்தை வளாகத்தை திறக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே வாணிப்புத்தூா் பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை கூடுகிறது. இதில், வாணிப்புத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கடைகளை அமைத்து தங்களது விளைபொருள்களை விற்பனை செய்து வந்தனா்.
இந்நிலையில், வாரச் சந்தையை விரிவுபடுத்தி மேற்கூரை அமைத்து தர வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அரசு சாா்பில் மூலதன மானிய திட்டத்தின்கீழ் ரூ.82 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Advertisement
Advertisement
கடந்த ஒரு மாதத்துக்கு முன் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தற்போது வரை வாரச் சந்தை வளாகம் திறக்கப்படவில்லை. இதனால், கொங்கா்பாளையம் சாலையில் வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
இது குறித்து சந்தை வியாபாரிகள் கூறுகையில், மேம்படுத்தப்பட்ட வாரச் சந்தை திறக்கப்படாததால் நாங்கள் சாலைகளில் கடைகளை அமைத்து அவதியடைந்து வருகிறோம். வாரச் சந்தை வளாகம் திறக்கப்படாததால் அதை சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனா்.
எனவே, வாரச் சந்தை வளாகத்தை உடனடியாக திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.