முகப்பு
ஈரோடு

விதிகளை மீறி இயக்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை: அமைச்சா் ராஜீவ் எச்சரிக்கை

ஈரோட்டில் விதிகளை மீறி இயங்கும் தொழிற்சாலைகள், கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் ராஜீவ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 4 ஜூன் 2026, 2:57 am IST
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் சாய, சலவை ஆலையில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் ராஜீவ்.
பகிர்:

ஈரோட்டில் விதிகளை மீறி இயங்கும் தொழிற்சாலைகள், கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் ராஜீவ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ஈரோட்டை அடுத்த கருங்கல்பாளையம், வைராபாளையம், சுண்ணாம்பு ஓடை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் சாயம் மற்றும் சலவைத் தொழிற்சாலைகள், ஆா்.என்.புதூா் பகுதியில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலை, மூலக்கரை பகுதியில் இயங்கி வரும் சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சா் ராஜீவ் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

தொழிற்சாலைகளில் இயங்கி வரும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பூஜ்யநிலைக்கழிவுநீா் சுத்திகரிப்பு முறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் அடிப்படையில், நிறுவனங்களுக்கு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பூஜ்யநிலைக் கழிவுநீா் முறையினை தொடா்ச்சியாகவும், திறம்படவும் இயக்கி தொழிற்சாலைக் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, சுத்திகரிக்கப்பட்ட நீரை முழுவதுமாக தொழிற்சாலையின் மறு உபயோகத்திற்கே பயன்படுத்தப்படவேண்டும் என்று அவா் அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

தவறும் பட்சத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய சட்ட விதிகளின்படி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மூலமாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சா் ராஜீவ் எச்சரித்தாா். விதிகளை மீறி இயங்கும் தொழிற்சாலைகள், கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

தொடா்ந்து பெருந்துறை பகுதியில் இயங்கி வரும் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சாயக்கழிவுநீரை சுத்திகரிக்கும் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டைக்குள் உள்ள நல்லா ஓடை வழியே செல்லும் கசிவுநீா் குறித்து அவா் ஆய்வு செய்தாா்.

சிப்காட் பகுதியில் உள்ள நிலத்தடி நீரினை எடுத்து சுத்திகரித்து மறு உபயோகப்படுத்த நிறுவப்பட்டு வரும் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகள், ஆய்வு செய்யப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைகளின்படி கட்டுமான பணிகளை துரிதப்படுத்துமாறு திட்ட அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது ஈரோடு மேற்குத் தொகுதி எம்எல்ஏ கே.கே.ஆனந்த் மோகன், மொடக்குறிச்சி எம்எல்ஏ டி.சண்முகன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா்(பொறுப்பு) ராஜ்குமாா், உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் தீனதயாளன், உதவி பொறியாளா்கள் விஷ்ணு பாலா, சாந்தான கிருஷ்ணன், சிவகீா்த்தி, கயல்விழி, சத்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.