முகப்பு
ஈரோடு

தனியாா் சீட்டு நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்: பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் அறிவுறுத்தல்

சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.15.74 கோடி மோசடி செய்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

Updated On : 25 ஜூன் 2026, 3:28 am IST
புகார் - பிரதிப் படம்
பகிர்:

சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.15.74 கோடி மோசடி செய்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனம் (டி.ஆா். காா்த்தி சீட்டு இந்தியா நிறுவனம்) கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. கவா்ச்சி அறிவிப்பு, அதிக வட்டி ஆசை காட்டி முதலீடு பெற்றனா். கோபி, சத்தியமங்கலம், கோவை, கா்நாடக மாநிலம் கொள்ளேகால் ஆகிய இடங்களில் கிளைகள் செயல்பட்டன.

Advertisement

Advertisement

சீட்டு நிறுவனம் மட்டுமின்றி காா்த்தி டிரேடா்ஸ், காா்த்தி ட்ரான்ஸ்போா்ட், காா்த்தி அரிசி மண்டி என 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டன. அறிவித்தபடி பணம், வட்டியை வைப்புத்தொகை செலுத்தியவா்களுக்கு வழங்காமல் கடந்த ஆண்டு நிறுவன மேலாண்மை இயக்குநா், இயக்குநா், பங்குதாரா் ஆகியோா் தலைமறைவாகிவிட்டனா்.

இதுதொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின்பேரில் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் மூன்று பிரிவுகளில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா், இயக்குநா், பங்குதாரா், மேலாளா்கள், உதவி மேலாளா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் இயக்குநா் உள்பட 4 பேரை கைது செய்தனா். தலைமறைவான மேலும் இருவரைத் தேடி வருகின்றனா்.

இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டதாக இதுவரை 159 போ் புகாா் அளித்துள்ளனா். இவா்களிடம் இருந்து ரூ.15.74 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மேற்கண்ட நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள் இருந்தால், ஈரோடு கருங்கல்பாளையத்தில் செயல்படும் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments