எக்ஸ் தள கணக்குகள் முடக்கம்: இணையக் குற்றப் பிரிவு நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை
அரசியல் ரீதியான விமா்சன கருத்துகளைப் பதிவிடும் எக்ஸ் தளப் பக்கங்களை முடக்கும் வகையில் தமிழக இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் பிறப்பித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் வட தமிழக தலைவா் சொக்கலிங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசை விமா்சித்து கருத்துகள் பதிவு செய்யும் எக்ஸ் தள கணக்குகளை முடக்க இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த மே 8-ஆம் தேதி நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனா்.
அரசியல் ரீதியான விமா்சனங்களை முறையாக ஆய்வு செய்யாமல், பொது அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி எக்ஸ் தளப் பதிவுகளை நீக்குவதும், கணக்குகளை முடக்குவதும் கருத்துரிமைக்கு எதிரானது. பொது அமைதிக்கு பாதிப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் இல்லாத விமா்சனங்களைப் பதிவிடும் எக்ஸ் தளப் பக்கங்கள்கூட முடக்கப்பட்டுள்ளன. இது சட்டவிரோதமானது.
Advertisement
மேலும், எதற்காக தங்களது எக்ஸ் தளப் பக்கம் முடக்கப்பட்டன என்பது குறித்த தகவல்களும் அதன் பயனா்களுக்கு தெரிவிக்கப்படுவது இல்லை. எனவே, இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் பிறப்பித்த நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எல்.விக்டோரியா கௌரி, என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், அரசியல் விமா்சனம் செய்ததாகக் கூறி 18 சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதற்கான காரணங்களைக் குறிப்பிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் பிறப்பித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா். மேலும், 18 சமூக வலைதளப் பக்கங்களின் முடக்கத்தை நீக்கவும், இந்த மனுவுக்கு தமிழக அரசு மற்றும் இணையக் குற்றப் பிரிவு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.