நீலகிரி மாவட்டத்தில் இனிமேல் சமைத்த உணவுப் பொருள்களை காகிதங்கள், பாலீதீன் கவர்களில் பொட்டலம் கட்டக் கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஆட்சியர் பி.சங்கர் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் ஹோட்டல்கள், பேக்கரிகள், டீ கடைகளில் சமைத்த உணவுப் பொருள்களை காகிதங்கள், பாலீதீன் கவர்களில் பொட்டலம் கட்டி வியாபாரிகள் விற்கின்றனர். இதனால், காகிதத்தில் உள்ள காரீயம், காட்மியம் போன்ற ரசாயனப் பொருள்கள் உணவுப் பொருள்களோடு கலந்து புற்றுநோய், கல்லீரல், மூளை, நரம்பு பாதிப்புகள், ரத்த சோகை, செரிமானக் குறைபாடுகள் ஏற்படும் அபாயமுள்ளது.
காகிதங்களில் பொட்டலம் மடிப்பதை இந்திய உணவுப் பாதுகாப்பு, தரங்கள் நிர்ணய ஆணையம் தடை செய்துள்ளது. இதற்கு மாற்றாக வாழை இலை, தேக்கு இலை, பாக்கு மட்டை உள்ளிட்ட இயற்கை, எளிதில் மட்கக்கூடிய பொருள்களைப் பொட்டலமிட பயன்படுத்த வேண்டும். அதேபோல டீ, பால், சாம்பார், ரசம் உள்ளிட்ட சமைத்த உணவுகளை பாலீதீன் கவர்களில் பயன்படுத்தக் கூடாது. இதை மீறி காகிதம், பாலீதீன் கவர்களில் பொட்டலமிட்டு வழங்குவது கண்டறியப்பட்டால் வியாபாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.