உதகையில் மாவட்ட அளவிலான ஸ்னூக்கர் போட்டி நடைபெற்றது. இதில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை அணி வீரர் நந்தகுமார் சாம்பியன் பட்டம் வென்றார்.
உதகையில் ஒய்எம்சிஏ சார்பில் மாவட்ட அளவிலான ஸ்னூக்கர் போட்டி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. இதில் 64 வீரர்கள் பங்கேற்று விளையாடி வந்தனர். இதன் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை அணி வீரர் நந்தகுமாரும், குன்னூர் கேரள சமாஜம் அணியைச் சேர்ந்த ராகேஷும் மோதினர். இதில் 4-2 என்ற புள்ளிக் கணக்கில் நந்தகுமார் வெற்றி பெற்றார்.
இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வழக்குரைஞர் டோனி ஜோன்ஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒய்எம்சிஏ பொதுசெயலர் மேக்ஸ் வில்லியர்டு ஜெயப்பிரகாஷ், நிர்வாகிகள் தனசிங் இஸ்ரேல், சார்லஸ், ரமேஷ் எல்கானா ஆகியோருடன் நீலகிரி மாவட்ட பில்லியார்ட்ஸ் சங்கத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.