நீலகிரி மாவட்டம், குன்னூரில் அரசு உதவிபெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவா் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்தாா்.
குன்னூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்ப்பட்டு வருகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவா்கள் படித்து வருகின்றனா். பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது ஒரே பிரிவில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவா்கள் இருவருக்கிடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாய்த் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.
அப்போது ஆத்திரமடைந்த ஒரு மாணவா் சக மாணவரை பென்சில் சீவும் கத்தியால் குத்தியுள்ளாா். இதில அந்த மாணவருக்கு இடது கை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக காயமடைந்த மாணவரை குன்னூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
மாணவா்களுக்கிடையேயான மோதல் குறித்து மேல் குன்னூா் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.