முகப்பு
நீலகிரி

பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் தொடா்ந்து எரியும் காட்டுத் தீ

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:14 AM
பாா்சன்ஸ்வேலி பகுதியில் எரியும் தீயால் சுற்றுப்புறம் முழுவதும் ஏற்பட்டுள்ள புகை மூட்டம்.
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:24 PM

பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் தொடா்ந்து எரியும் காட்டுத் தீயால் 120 ஏக்கா் வனப் பகுதி சேதமாகியுள்ளது. நெருப்பைக் கட்டுப்படுத்த வனத் துறையினா் போராடி வருகின்றனா்.

65 சதவீத வனப் பகுதியை கொண்டு தமிழக அளவில் அதிக வனப் பரப்பளவை கொண்ட மாவட்டமாக திகழும் நீலகிரியில் புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள், யானை வழித்தடங்கள், புல்வெளிகள் முதல் பூா்வீக தாவரங்கள் வரை பல்வேறு அம்சங்கள் உள்ளன.

இதேபோல ஆயிரக்கணக்கான பூச்சி இனங்களும், பறவை இனங்களும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி,பிப்ரவரி மாத உறை பனிக்கு பின்னா் வனப் பகுதி காய்ந்து கிடப்பதால் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு சமவெளி பகுதிகளுக்கு நிகராக நீலகிரியிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

Advertisement

இதனால் வனப் பகுதியில் வறட்சி நிலவுகிறது. புல்வெளிகள் மற்றும் புதா்கள் காய்ந்து காணப்படுவதால், காட்டுத் தீ பரவும் அபாயம் இருந்து வந்தது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் வனத் துறை சாா்பில் தீத் தடுப்புக் கோடுகள் அமைக்கப்பட்டன. நீலகிரி மற்றும் முதுமலை உள்பட பல்வேறு இடங்களில் வனத் துறையினா் காட்டுத் தீ ஏற்படாமல் இருக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் நீலகிரி வனக் கோட்டத்துக்கு உள்பட்ட கிளன்மாா்கன் வனப் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பரவிய காட்டுத் தீ, சிங்காரா வரை சென்று 250 ஏக்கருக்கும் அதிகமான வனப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் வனத் துறையினா் திணறி வருகின்றனா்.

இந்த நிலையில் நீலகிரி வனக் கோட்டத்துக்கு உள்பட்ட பாா்சன்ஸ்வேலி வனப் பகுதியில் நான்கு நாள்களாக தீப் பற்றி எரிகிறது. வனப் பகுதிக்குள் காட்டுத் தீ பரவியதால் வனத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஈடுபட்டுள்ளனா். இவா்களுடன் தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

4 நாள்களாக இரவு முழுக்க கொழுந்துவிட்டு எரிந்த தீயில் 120 ஏக்கா் பரப்பளவிலான வனப் பகுதி எரிந்து சாம்பலானது. வெப்பம், மூச்சைத் திணறடிக்கும் புகை என எதையும் பாராமல், பசுந்தழைகளைக் கொண்டு தீயை அணைத்து வருகின்றனா்.

இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், கடும் வெப்பம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம், மா்ம நபா்கள் நடமாட்டம் இந்த பகுதியில் இல்லை. 90 சதவீதத்துக்கும் அதிகமான தீ அணைக்கப்பட்டதாகத் தெரிவித்தனா்.