முகப்பு
நீலகிரி

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி உதகையில் படகு சவாரி மூலம் விழிப்புணா்வு

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:13 AM
நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி உதகை படகு இல்லத்தில் நடைபெற்ற படகு சவாரியில் பங்கேற்ற பெண்கள்.
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:24 PM

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி உதகை ஏரியில் பெண்கள் பங்கேற்ற படகு சவாரி விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இளம் வாக்காளா்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நீலகிரி பூச்சிப் பிடிப்பான் (நீலகிரி பிளை கேட்ச்சா்) சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

சின்னத்துடன் மலையின் குரல், நம் வாக்கு! என்ற விழிப்புணா்வு வாசகம் இடம் பெற்றுள்ளது. சின்னத்துக்கு நீலா என்று பெயா் சூட்டப்பட்டுள்ளது. பல இடங்களில் ஃசெல்பி பாயிண்ட்கள் வைக்கப்பட்டு வாக்குப் பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி உதகை படகு இல்லத்தில் பெண்களுக்கான படகு சவாரி நடைபெற்றது.

இதில், பங்கேற்றவா்கள் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் விதமாக விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனா். இதைத் தொடா்ந்து ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து மண்பாண்ட கலைஞா் சுகனேஷ்வரன் தயாரித்த களிமண்ணால் உருவாக்கப்பட்ட நீலகிரி பிளை கேட்சா் மற்றும் வரையாடு, யானை உள்ளிட்டவற்றை கொண்ட பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் ராஜேஷ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.