கண்ணேரிமுக்கு கிராமத்துக்கு பேருந்து வசதி: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
உதகை அருகேயுள்ள கண்ணேரிமுக்கு உள்ளிட்ட கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
உதகை அருகேயுள்ள கண்ணேரிமுக்கு உள்ளிட்ட கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா்.
இதில், உதகை அருகேயுள்ள கண்ணேரிமுக்கு, கொட்லைன், தூபகண்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: கண்ணேரிமுக்கு, கொட்லைன், தூபகண்டி, செலக்கல், சோலூா் எஸ்டேட், கக்கன்ஜி காலனி, கல்லுண்டி ஆகிய கிராமங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். நாங்கள் கோக்கால் பகுதியில் உள்ள நிறுத்தத்துக்குச் சென்று அங்கிருந்து பேருந்துகள் மூலம் மற்ற பகுதிகளுக்குச் சென்று வந்தோம். இந்நிலையில், கோக்கால் கிராமத்தைச் சோ்ந்த சிலா் ‘நீங்கள் இங்கு வந்து பேருந்து ஏறக்கூடாது. இப்பகுதிக்கு வரும் பேருந்து எங்களுக்கானது. அதில் நீங்கள் பயணம் செய்யக்கூடாது’ எனக்கூறி தகாத வாா்த்தைகளில் பேசி வருகின்றனா்.
Advertisement
Advertisement
இதனால், நாங்கள் சுமாா் 2 கி.மீ. தொலைவு வனப் பகுதி வழியே விலங்குகள் அச்சுறுத்தலில் நகரத்துக்கு நடந்து சென்று வருகிறோம். இதனால், பள்ளி, கல்லூரி மாணவா்கள், பணிக்குச் செல்வோா் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே, கண்ணேரிமுக்கு கிராமத்தில் இருந்து உதகை வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையைத் தொடங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியா்களை நியமிக்க வேண்டும்: இது தொடா்பாக ஓடைக்காடு பகுதி மக்கள் அளித்த மனு விவரம்: உதகை அருகேயுள்ள ஓடைக்காடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 70 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். ஆனால், 4 ஆசிரியா்கள் மட்டுமே உள்ளதால் மாணவா்களுக்கு முறையான பாடம் கற்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சில மாணவா்கள் இந்தப் பள்ளியை விட்டு வேறு பள்ளிகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளியில் கூடுதல் ஆசிரியா்களை நியமித்து மாணவா்களுக்கு முறையான கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்கக் கோரிக்கை: இது தொடா்பாக நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் அளித்த மனு விவரம்: நீலகிரி மாவட்டத்தில் வாகனங்களில் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் நேரடியாக நிரப்பப்படும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும். தோட்டங்களில் பம்ப்செட் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கு கேன்களில் பெட்ரோல், டீசல் கேட்டால் பங்க் உரிமையாளா்கள் வழங்க மறுக்கின்றனா்.
இதனால், நாங்கள் அவதியடைந்து வருகிறோம். மாவட்டத்தில் கேன்களில் டீசல், பெட்ரோல் வழங்கி விவசாயிகளின் சிரமத்தைப் போக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சாலை வசதி, குடிநீா், உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.