திருப்பூரில் தனியார் பள்ளி மாணவர் சாவு
திருப்பூரில் தனியார் பள்ளி மாணவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
திருப்பூரில் தனியார் பள்ளி மாணவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
திருப்பூர், முத்தணம்பாளையத்தைச் சேர்ந்தவர் சகாதேவன் மகன் அகிலன் (15). இவர், தாராபுரம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. திருப்பூர், கே.எஸ்.சி. அரசுப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்ததால் அங்கு சென்று எழுதி வந்தார். இந்நிலையில், அங்கு தேர்வு எழுத வந்த மற்றொரு தனியார் பள்ளி மாணவருக்கும், அகிலனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதையடுத்து, அகிலனிடம் தகராறில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் சிலர் அவரது வீட்டுக்குச் சென்று அகிலனைத் தாக்கினார்களாம். அகிலனும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து எதிர்த்தரப்பு மாணவர்களைத் தாக்கியதாகத் தெரிகிறது.
இந்த விவரம் இரு தனியார் பள்ளிகளுக்கும் தெரியவந்ததையடுத்து இரு பள்ளிகளின் நிர்வாகங்களும் மாணவர்களை அழைத்துக் கண்டித்துள்ளன. மேலும், இச்சம்பவம் தொடர்பாக மாணவர்களைப் பள்ளியில் ஆசிரியர்கள் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில், அகிலன் கடந்த வாரம் வயிற்றில் காயம் அடைந்தாராம். மேலும், பொதுத் தேர்வை ஒட்டி சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் ஏப்ரல் 2-ஆம் தேதி சிறப்பு வகுப்புக்காக பள்ளிக்குச் சென்றிருந்த அகிலன் வாந்தி எடுத்ததுடன், உடல்நிலையும் பாதிக்கப்பட்டதாம்.
இதையடுத்து அவரது பெற்றோருக்குப் பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அகிலனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உடல்நிலை பலவீனம் அடையவே திருப்பூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, அகிலனை அங்கு புதன்கிழமை அதிகாலையில் சேர்த்துள்ளனர். இருப்பினும் அங்கு அகிலன் உயிரிழந்தார். இதுகுறித்து, திருப்பூர் ஊரக போலீஸார் விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.