கார் விபத்தில் கோவை கேபிள் ஆபரேட்டர் சாவு
வெள்ளக்கோவில் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் கோவையைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் கோவையைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் அங்குராஜ் (65), கேபிள் டிவி ஆபரேட்டர். இவரது மனைவி நாகமணி (60). இவர்களுடைய உறவினர் ஆறுமுகம் (70). இவரது மனைவி ஜெகதீஷ்வரி (60). இவர்கள் நான்கு பேரும் நாமக்கல் மாவட்டம், மோகனூருக்குச் சென்றுவிட்டு காரில் ஞாயிற்றுக்கிழமை கோவை திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில், வெள்ளக்கோவில் - காங்கயம் சாலை எல்லக்காட்டுவலசு பிரிவு அருகே காரும், எதிரே ஊத்துக்குளியில் இருந்து வெள்ளக்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வேனும் மோதிக்கொண்டன.
இவ்விபத்தில் காரை ஓட்டி வந்த அங்குராஜ் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்ற மூன்று பேரும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.