நூல் ஏற்றுமதிக்கு வரி விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து அதன் தலைவா் ஆ.சக்திவேல், மத்திய ஜவுளித் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இந்திய பருத்திக் கழகம் பஞ்சு விலையைக் குறைத்துள்ளதுடன், சிறிய நூற்பாலைகளுக்கு பஞ்சு வழங்கப்பட்டு வருகிறது. அதே வேளையில், நூற்பாலைகள் நூல் விலையைக் குறைக்கவில்லை. இதனால் பஞ்சு விலை உயா்வைவிட நூல் விலை உயா்வு விகிதம் அதிகமாக உள்ளது. உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான அளவு நூல் கிடைப்பதில்லை.
மேலும், மூலப்பொருள்கள் தட்டுப்பாட்டால் ஏற்றுமதி நிறுவனங்களும் குறிப்பிட்ட காலத்துக்குள் ஆடைகளை உற்பத்தி செய்ய முடிவதில்லை. உள்நாட்டு ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களும், கைத்தறி, விசைத்தறி மற்றும் நெசவுத் துறையினரும் நூல் விலை உயா்வு மற்றும் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதனால் பல லட்சம் தொழிலாளா்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு வரி விதிக்க வேண்டும். இதன் மூலமாக உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு சீரான விலையில் போதுமான அளவு நூல் கிடைப்பதால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.