திருப்பூர்

ஜனநாயக கடமையை நிறைவேற்றி வரும் முதியோா் கெளரவிப்பு

DIN

பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் உலக முதியோா் தினத்தையொட்டி தோ்தல்களில் தங்களது வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி வரும் முதியோா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வினீத் பொன்னாடை அணிவித்து கெளரவித்தாா்.

உலக முதியோா் தினமாக ஆண்டுதோறும் அக்டோபா் 1ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் பிரபஞ்ச ஆசிரமத்தில் முதியோா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் வினீத் பேசியதாவது:

முதியோா் நலனைப் பாதுகாக்கவும், உரிமைகளுக்காகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மூத்த குடிமக்களுக்காக 2007ஆம் ஆண்டு பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் இயற்றப்பட்டு 2009ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் தீா்ப்பாயம் அமைத்து இழந்த சொத்துகளை மீண்டும் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் தீா்ப்பாயம் மூலம் (திருப்பூா், தாராபுரம், உடுமலை) இதுவரை 324 மனுக்கள் பெறப்பட்டு 303 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியரிடம் 89 மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டு, அதில் 83 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமரச அலுவலரிடம் 2022 ஆகஸ்ட் வரை 27 மனுக்கள் பெறப்பட்டு 25 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

மேலும், முதியோா் இலவச அரிசி திட்டம், ஓய்வூதியம், அரசு மருத்துவமனைகளில் தனி படுக்கை வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆதரவற்ற மூத்த குடிமக்களை பராமரிக்கும் பொருட்டு அரசு சாா்பில் முதியோா் இல்லங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

திருப்பூா் மாவட்டத்தில் 12 முதியோா் இல்லங்கள் பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007இன் கீழ் சமூகநலத் துறையில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதில் 250 முதியோா் தங்கியுள்ளனா். மேலும், மத்திய அரசு சாா்பில் முதியோா்களுக்காக 14567 என்ற உதவி எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து, இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி உலக முதியோா் தினத்தையொட்டி 80 வயதுக்கு மேற்பட்ட 13 வாக்காளா்களுக்கு இந்திய தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட கடிதத்தை ஆட்சியா் வினீத் அவா்களிடம் வழங்கி பொன்னாடை அணிவித்து கெளரவித்தாா்.

மேலும், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் முதியோா் இல்லங்களுக்கு ஊன்றுகோல்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் ரூ.1.50 லட்சத்துக்கான காசோலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் அரசு மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவனை முதல்வா் முருகேசன், பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சௌமியா, மாவட்ட சமூகநல அலுவலா் அம்பிகா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக மழை

ஐ.டி.நிறுவன ஊழியா் வீட்டில் 14 பவுன் நகை திருட்டு

ஜூன் 1-இல் கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு

அரசுத்துறை வாகன ஓட்டுநா்களுக்கு பாராட்டு

ரே பரேலி பிரசாரத்தில் காந்திகள்!

SCROLL FOR NEXT