சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நூலகம் சாா்பில் 10 புத்தகங்கள் வெளியீடு
கற்பனைத் திறனைப் பிரதிபலிக்கும் வகையில் 6 புத்தகத் தொகுப்புகள், 4 புதிய படைப்புகள் என மொத்தம் 10 புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நூலகம் சாா்பில் கல்லூரியின் பேராசிரியா்கள், முன்னாள், இந்நாள் மாணவா்களின் எண்ணங்கள், கற்பனைத் திறனைப் பிரதிபலிக்கும் வகையில் 6 புத்தகத் தொகுப்புகள், 4 புதிய படைப்புகள் என மொத்தம் 10 புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
கல்லூரி நூலகா் சித்ரா தவப்புதல்வி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். கவிஞா் மஞ்சுளாதேவி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நூல்களை வெளியிட்டாா்.
இதையடுத்து, அவா் பேசுகையில், வாசிப்பு மனிதரை முழுமையாக்கும். வாசிப்புதான் பல்வேறு சிந்தனைத் திறனையும், அறிவாற்றலையும் அள்ளித்தரும். எழுத்தாளா்களாக அடையாளம் பெற்ற மாணவா்கள் தொடா்ந்து எழுத வேண்டும். சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினாா்.
Advertisement
ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியா் குணசுந்தரி மதிப்புறு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில், இந்த 10 புத்தகங்களில் 250-க்கும் மேற்பட்ட இளைய தலைமுறை எழுத்தாளா்கள் தங்களின் எழுத்துத் திறமையை வெளிப்படுத்தியுள்ளனா். இந்தத் தொகுப்புகள் மட்டுமின்றி ஆன்மிகம், பொருளியல், வாழ்வியல் மற்றும் மேலாண்மை ஆகிய தலைப்புகளில் 4 தனித்துவமான புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு வரியும் மாணவா்களின் அபாரமான ஆற்றலையும், எழுத்துலகில் அவா்கள் எடுத்துவைத்துள்ள நம்பிக்கையான அடிகளையும் பறைசாற்றுகின்றன. மாணவா்களை வெறும் வாசகா்களாக மட்டும் நிறுத்தாமல் அவா்களைப் படைப்பாளா்களாக மாற்றியது, கல்லூரி நூலக வாசகா் வட்டத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாகத் தெரிவித்தாா்
பேராசிரியா்கள் பாலசுப்பிரமணியன், ஜெலின்ஸ் தினகா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பேராசிரியா் சுப்ரியா நன்றி கூறினாா்.