அரசுக் கலைக் கல்லூரிகளில் குவியும் விண்ணப்பங்கள்! அதிகம் விரும்பும் கல்லூரி, படிப்பு!
தமிழகத்தின் முன்னணி அரசுக் கலைக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் குவிந்து வருவது பற்றி..
தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கும் நடைமுறை தீவிரமாகி வரும் நிலையில், முன்னணி அரசுக் கலைக் கல்லூரிகளுக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
அதிலும் குறிப்பாக, தமிழகத்தின் முன்னணி அரசுக் கலைக் கல்லூரிகள் மற்றும் சென்னையில் உள்ள அரசுக் கல்லூரிகளுக்கு மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 180க்கும் மேற்பட்ட அரசுக் கல்லூரிகளில் பிரெசிடென்ஸி கல்லூரிக்கு 32 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இங்கிருப்பது வெறும் 2,380 மாணவர் சேர்க்கை இடங்கள்தான்.
Advertisement
Advertisement
அடுத்தடுத்த இடங்களில் கோவை அரசுக் கல்லூரி, டாக்டர் அம்பேத்கர் அரசுக் கலைக் கல்லூரி, ராணி மேரிக் கல்லூரிகள் உள்ளன.
அரசுக் கல்லூரிகளில் அதிகமான விண்ணப்பங்கள் எந்த படிப்புக்கு வந்துள்ளன என்று பார்த்தால் பிஏ தமிழ் படிப்புக்குத்தான் என்கின்றன தரவுகள். அதாவது சுமார் 2 லட்சம் பேர் இந்தப் படிப்புக்கு விண்ணப்பித்திருக்கிறார்களாம்.
அடுத்தடுத்த இடங்களில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிகாம் உள்ளன. பிறகு, பிஏ ஆங்கிலம் பிபிஏ, பிஎஸ்சி வேதியியல், பிஏ பொருளாதாரம் போன்ற படிப்புகளுக்கும் அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன.
சென்னையில் உள்ள பிரெசிடென்சி கல்லூரி, லயோலா கல்லூரி போன்றவை மாணவர்களின் அதிக விருப்பத்துக்கு உரிய கல்லூரிகளாக உள்ளன.
அதுபோல, 1400 மாணவர் சேர்க்கை இடங்களைக் கொண்ட அரசு நந்தனம் கலைக் கல்லூரிக்கும் 25 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
தமிழகத்தில் அரசுக் கலைக் கல்லூரிகளில் 1.25 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்கள்தான் உள்ளன. ஆனால் லட்சக் கணக்கில் விண்ணப்பங்கள் வருகின்றன. எனவே, தமிழ்நாட்டில் விரைவாக அரசுக் கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.
அரசுக் கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க மே 29ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நீட்டிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.