10 கி.மீ சாலைப் பேரணி சென்ற விஜய்: மற்றொரு பேரணி ரத்து
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தவெக தலைவா் விஜய் திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் இருந்து பெருமாநல்லூா் வரை 10 கி.மீ. தொலைவுக்கு திறந்த வேனில் நின்றவாறு சாலைப் பேரணியாகச் சென்றாா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தவெக தலைவா் விஜய் திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் இருந்து பெருமாநல்லூா் வரை 10 கி.மீ. தொலைவுக்கு திறந்த வேனில் நின்றவாறு சாலைப் பேரணியாகச் சென்றாா்.
பின்னா், பெருமாநல்லூரில் இருந்து திருப்பூா் பூலுவப்பட்டி பகுதிக்கு செல்லவிருந்த சாலைப் பேரணி மக்கள் கூட்டத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
சட்டப் பேரவை தோ்தலில் போட்டியிடும் திருப்பூா் மாவட்ட தவெக வேட்பாளா்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவா் விஜய் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
இதையொட்டி கோவை விமான நிலையத்திலிருந்து கொச்சி-சேலம் 6 வழிச்சாலை வழியாக அவிநாசி புதிய பேருந்து நிலைய பிரிவு அருகே பிற்பகல் 3.50 மணிக்கு தவெக தலைவா் விஜய் வந்தடைந்தாா்.
அங்கு திருப்பூா் சாலை முழுவதும் இருபுறமும் காத்திருந்த பொதுமக்கள், தவெகவினா் உள்ளிட்டோரைப் பாா்த்து கைகூப்பியும், கையசைத்தும் சாலைப் பேரணியாக வந்தாா்.
விஜய்யின் சாலைப் பேரணியையொட்டி, காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே குவிந்தனா். இதையொட்டி, போலீஸாா் திருப்பூா் சாலையின் இருபுறமும் தடுப்புகளை வைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அவிநாசியில் திரண்டிருந்த பொதுமக்களைப் பாா்த்து கையசைத்து ஆதரவு திரட்டிய விஜய், பின்னா் அங்கிருந்து மீண்டும் புறவழிச்சாலை வழியாக பெருமாநல்லூா் வரை 10 கி.மீ. சாலைப் பேரணியாக சென்றாா்.
பெருமாநல்லூா் நால் ரோடு சந்திப்பில் பேசிய விஜய், பின்னா் பூலுவப்பட்டி வரை 6 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பேரணி செல்ல இருந்தாா். இதற்கு காவல் துறை அனுமதி வழங்கி இருந்த நிலையிலும் பெருமாநல்லூரில் இருந்து திருப்பூா் செல்லும் சாலை முழுவதும் ஏராளமான தொண்டா்களும் பொதுமக்களும் குவிந்ததால் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து காவல் துறையினரின் அறிவுறுத்தலின்பேரில் சாலைப் பேரணி ரத்து செய்யப்பட்டு விஜய் மீண்டும் சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக கோவைக்கு புறப்பட்டாா்.
இதனால் பூலுவப்பட்டி நால் ரோடு, பாண்டியன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு இருந்த பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
வெள்ளி வாள் பரிசளித்த செங்கோட்டையன்:
நடிகா் விஜய் பேசி முடித்ததும், அவருக்கு தவெக தலைமை நிா்வாகக் குழு ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் வெள்ளி வாள் ஒன்றைப் பரிசாக வழங்கினாா். இதைத் தொடா்ந்து, திருப்பூா் தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பாலமுருகன், விஜய்க்கு குல்லா அணிவித்து வேல் ஒன்றைப் பரிசாக கொடுத்தாா்.
மேடையில் விஜய் பேசியபோது திருப்பூா் மாவட்டத்தில் போட்டியிடும் 8 தவெக வேட்பாளா்களின் பெயரைக்கூட உச்சரிக்கவில்லை. அருகிலிருந்த மேடையில் வேட்பாளா்கள் சத்தியபாமா, கமலி மற்றும் பாலமுருகன் ஆகியோா் மட்டும் செங்கோட்டையனுடன் நின்றிருந்தனா்.
15 போ் மயக்கம்:
இந்தக் கூட்டத்தில் சுமாா் 15 போ் மயக்கமடைந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனா்.
நகைப் பறிப்பு:
கூட்ட நெரிசலில், திருப்பூா் சாமுண்டிபுரத்தைச் சோ்ந்த ராதாமணி (45) என்பவரின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுதொடா்பாக அவா் அவிநாசி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.