குமரியில் இன்று சாலைப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கும் விஜய்!
குமரியில் இன்று விஜய் சாலைப் பேரணி மேற்கொள்ளவுள்ளது குறித்து...
கன்னியாகுமரி மாவட்ட தவெக வேட்பாளர்கள் 6 பேரை ஆதரித்து, அந்தக் கட்சியின் தலைவர் விஜய் இன்று (ஏப்.12) சாலைப் பேரணி மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் விஜய், கார் மூலம் பிற்பகல் 4 மணியளவில் கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானா வருகிறார்.
அங்கு தவெக நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பு அளிக்கவுள்ளனர். பின்னர் திறந்த பிரசார வாகனத்தில் ரவுண்டானாவில் இருந்து கன்னியாகுமரி ஜீரோ பாயின்ட் வரை சாலைப் பேரணியாகச் சென்று வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
Advertisement
நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் விஜய், பின்னர் அவர், அதே வழியில் திரும்பி வந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு செல்கிறார்.
அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற இருந்த அவரது பிரசார பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபம் அருகே ஏப். 9 ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள தவெக தலைவர் விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், நேரக்கட்டுப்பாடு காரணமாக பேசாமல் சென்றுவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, விஜய்யின் அடுத்தடுத்த பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கன்னியாகுமரிக்கு வரும் விஜய், சாலைப் பேரணி மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.